Ads 468x60px

Featured Posts


தினமணி செய்தி

dn


காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் உலகத் தமிழ் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம்

காரைக்குடி கம்பன் கழகத்தின் 75ஆம் ஆண்டு பவள விழாவையொட்டி கம்பன் தமிழ் ஆய்வு மையம்

காரைக்குடி கம்பன் கழகத்தின் 75ஆம் ஆண்டு பவள விழாவையொட்டி கம்பன் தமிழ் ஆய்வு மையம் சார்பில் உலகத் தமிழ் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் அடுத்த ஆண்டு மார்ச் 23, 24 தேதிகளில் நடைபெற உள்ளது.

காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பல்வேறு நாடுகளில் இருந்து பேராசிரியர்களும், அறிஞர்களும் பங்கேற்கின்றனர். அதில் "காலந்தோறும் கம்பன்' என்ற தலைப்பில் கம்பன் நேற்று - இன்று- நாளை என்ற மூன்று பிரிவுகளில் இக் கருத்தரங்கம் நடைபெறும்.

பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழில் பி.எச்.டி, எம்.பில். மற்றும் பொது ஆராய்ச்சிகளுக்கு பதிவு செய்துள்ள மாணவர்கள் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை கருத்தரங்கில் வாசிக்கலாம். இக்கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு கருத்தரங்கத்தின்போது, "கம்பன் தமிழ் ஆய்வுக் கோவை' என்ற பெயரில் நூலாக வெளியிடப்படும்.

மேலும் விவரங்கள் பெற: கம்பன் தமிழ் ஆய்வு மையம், கம்பன் பணி மண்டபம், காரைக்குடி. மின்னஞ்சல்: kambantamilcentre@gmail.com அலைபேசி: 9445022137 இந்தப் பதிவுக்கான கடைசித் தேதி இந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி.

ஆராய்ச்சி மாணவர்களும், பொதுமக்களும் கலந்துகொள்ளும் வகையில் உள்நாட்டு ஆசிரியர்களுக்கு ரூ.500-ம் மாணவர்களுக்கு ரூ.350-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கு நடைபெறும் 2 நாள்களுக்கு தங்கும் வசதி, உணவு மற்றும் ஆய்வுக் கோவை நூலும் இலவசமாக அளிக்கப்படும்.

பரிசு: ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2012 வரையுள்ள காலங்களில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிகளிலும் வெளியாகியுள்ள கம்பன், கம்பராமாயணம் பற்றிய சிறந்த ஆய்வு நூலை எழுதிய ஆசிரியர்களுக்கு ரூ.5,000, பதிப்பாளர்களுக்கு ரூ.2,500 பரிசாக அளிக்கப்படும்.

Sunday 4 November 2012

வரவேற்கிறோம்


     பேரன்புடையீர்,
  வணக்கம். 1939ஆம் ஆண்டு கம்பனடிப்பொடி சா. கணேசனாரால் தொடங்கப் பெற்ற காரைக்குடிக் கம்பன் கழகம், எந்த ஒரு இலக்கிய அமைப்பின் சரித்திரத்திலும் நிகழ்ந்திராத வண்ணம், தொடர்ந்து  எழுபத்தி நான்கு ஆண்டுகள் கவிச்சக்கரவர்த்தி கம்பன் திருநாளைக் கொண்டாடி கன்னித் தமிழ் வளர்ப்பதில் தன் சேவையைச் செய்து வந்துள்ளது மாபெரும் சாதனையாகும்.
1989ல் நிகழ்ந்த கம்பன் திருநாள் பொன்விழாவை ஒட்டி தில்லியிலிருந்து முதன் முதலில் தமிழகத்திற்கு சாகித்திய அகாதெமியினரை அழைத்து வந்து அகில இந்திய இராமாயண மாநாடு ஒன்று வெற்றிகரமாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. 2013 மார்ச் மாதம் 21உ முதல் 27உ வரை வெகு விமரிசையாக நிகழ உள்ள கம்பன் திருநாளின் ஒரு வார பவள விழாவை ஒட்டி “காலந்தோறும் கம்பன்” என்ற பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றினை நடத்த திட்டமிடப் பெற்று ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

  முத்தமிழ்த் துறையில் முறை போகிய தமிழக அறிஞர்கள், கலைஞர்கள், வல்லுனர்கள் இம்முயற்சியினை வாழ்த்தி வரவேற்று ஆதரவுக் கரம் நல்கியுள்ளனர். இப் பன்னாட்டுக் கருத்தரங்கம் சிறப்பாக நிகழ்ந்திடவும், கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்த்து தம் ஆய்வு முடிவுகளால் செந்தமிழ்ப் பணியில் பங்கேற்று செம்மொழித் தமிழைச் சீராட்டிடவும்,  உலகெங்கிலும்  உள்ள தமிழ்ப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், சுவைஞர்கள் எல்லோரையும் இரு கரம் கூப்பி இனிப்புடன் தமிழ் கூறி வரவேற்கிறோம்; வந்து கலந்து மகிழ்ந்து, மகிழ்வித்து கண்டனைய, மண்டு புகழ், வண்டமிழ்ப் பணி ஆற்றிடுக ! தண்டமிழ் தழைத்திடச் செய்திடுக !! 

தமிழ்ப் பணியில்,
உங்கள் பணிவுள்ள,
கம்பன் தமிழ் ஆய்வு மையத்தினர்

கம்பன் தமிழ் ஆய்வு மையம்




  கம்பனின் இராமாவதாரக் காப்பியத்தால் பெரிதும் ஈர்க்கப் பெற்று காரைக்குடியில் 1939 ஏப்ரல் 2, 3 ஆகிய நாட்களில் ரசிகமணி டி.கே.சி தலைமையில் கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் தம் வாழ்நாள் வேள்வியைத் தொடங்கினார் சா.கணேசன் எனும் காந்தியடிகளின் தொண்டர். அன்றிலிருந்தது தொடர்ந்து, காரைக்குடியிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன் சமாதிக் கோயில் வளாகத்தில் கம்பன் கவியரங்கேற்றிய பங்குனி அத்தத் திருநாளிலும், அதற்கு முந்திய மூன்று நாட்களான பங்குனி மகம், பூரம், உத்திரம் ஆகிய நாட்களில் காரைக்குடியிலும் கம்பன் திருநாளைக் கொண்டாடினார். 

  கம்பன் பிறந்த நாளை நாம் அறியச் சான்று ஏதும் கிடைக்காததால், அவன்  தன் இராவதாரக் காப்பியத்தை அரங்கேற்றியதாகத் தனிப் பாடல் ஒன்றின் துணையால் அறிய நேர்ந்த நாளையே (கி.பி 886, பெப்ருவரி 23உ புதன்கிழமை) கம்பன் கவிச்சக்கரவர்த்தியாக இப்பூவுலகில் அவதரித்த நாளாகக் கொண்டு  கொண்டாடி வந்தார்.

  ஆண்டு தவறாது 44 ஆண்டுகள் தொடர்ந்து தம் வாழ்நாள் வரை (1982) கொண்டாடினார். 1983 முதல் அவர் விரும்பியவண்ணமே அவர்தம் தலைமாணாக்கரான கம்பன் அடிசூடியை செயலாளாராகக் கொண்டு அதே முறையில் தொடர்ந்து 30 ஆண்டுகளாக நடத்தி வந்து 2013ல் கம்பன் திருநாள் பவள விழா கொண்டாடப் பெற உள்ளது.

  உலகில் எங்கும், எம்மொழிக்கும் இல்லாததான மொழிக்கான கோயிலாக தமிழ்த் தாய் திருக்கோயிலை தமிழ்த் தாய், அகத்தியர், தொல்காப்பியர், கம்பன், திருவள்ளுவர், இளங்கோவடிகள், ஒலித்தாய், வரித்தாய் ஆகியோரின் சிலா வடிவங்களோடு அறுகோண அமைப்பிலான கல் திருப்பணித் திருக்கோயிலாக தமிழக அரசின் ஆதரவோடு கம்பன் மணிமண்டப வளாகத்தில் நிறுவினார். தமிழ்த் தாய், ஒலித்தாய், வரித்தாய் ஆகியோருக்கு முதன் முதலில், தம் வளர்ப்பு மைந்தரான ‘சிற்ப குரு’, வாஸ்து விஞ்ஞானி வை. கணபதி ஸ்தபதியைக் கொண்டு வடிவமைத்த பெற்றியர்.

  1968ல் நிகழ்ந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலைக் கண்காட்சிக் குழுவிற்கு முதல்வர், பேரறிஞர் அண்ணாவின் வேண்டுதலால் தலைமையேற்று, கண்டோரெல்லாம் வியக்கும் வண்ணம் கலைக்காட்சியை நடத்தியதோடு, கையேடு” என்ற கருத்துக் கருவூலத்தையும் பதிப்பித்தார்கள்.பிள்ளையார்பட்டித் தல வரலாறு, இராஜராஜன், தமிழ்த் திருமணம், Some Iconographic Concepts, கட்டுரைக் களஞ்சியம்  ஆகியன அவர்தம்  பிற ஆய்வு நூல்கள்.

  நீண்ட நாட்களாக மூல பாடம் இல்லாதிருந்த குறையைப் போக்க,  சில தமிழ் அறிஞர்களின் துணையோடு கம்பராமாயணத்திற்குச் சரியான மூல பாடம் ஒன்றினை எண்ணற்ற ஏட்டுச் சுவடிகள், பழம்பெரும் பதிப்புகளை ஆராய்ந்து முடிந்த அளவிற்குப் பாட பேதமற்ற, கல்லாதாரும் எளிதில் புரிந்து படிக்கும் படியாகச் சந்தி பிரித்து பொருள் மாலையுடன், கூடின ஒரு பதிப்பினை தம் நண்பர் மர்ரே எஸ் ராஜம் உதவியுடன் ஆறு காண்டங்களையும் தனித் தனியாகப் பதிப்பித்தார்கள். 

  சாதி, மத, பதவி, அரசியல் சார்பு பேதமற்று தமிழகத்தின் தலை சிறந்த  அறிஞர்கள் எல்லோரும் பங்கேற்ற தமிழ் இலக்கிய விழா இஃதொன்றே.
இளந்தலைமுறையினரை இனங்கண்டு நாளைய அறிஞர்களாக உருவாக்கும் வண்ணம், தமிழகம் முழுதுமுள்ள கல்லூரி மாணாக்கர்களுக்கான கம்பராமாயணம், திருக்குறளில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப் பெறுகின்றன; அடுத்த தலைமுறைப் பேச்சாளர்கள் உருவாகி வருகின்றார்கள்.

  ஆண்டுதோறும் இரண்டு கம்பராமாயணத்தில் புதிய கூறு ஒன்றைப் பற்றி அறக் கட்டளை ஆய்வுப் பொழிவுகள் நிகழ்த்தப் பெறுகின்றன; ஒன்று மூத்த அறிஞர்களைக் கொண்டும், மற்றொன்று இளந் தலைமுறைப் பேராசிரியர்களைக் கொண்டும். இதுவரை தாய் தன்னை அறியாத...., கம்பனின் மனவளம், கம்பனில் எண்ணமும் வண்ணமும், கம்பனில் நான்மறை, கம்பர் காட்டும் உறவும் நட்பும், கம்பர் போற்றிய கவிஞர், கம்பன் காக்கும் உலகு, கம்ப வானியல் என்பன நூல்களாக்கப் பெற்று அந்த அந்த  ஆண்டே வெளியிடப் பெற்றுள்ளன.

  மாதந்தோறும் முதற் சனிக் கிழமைகளில் தக்க அறிஞர் ஒருவரோடு, மாணாக்கர் / இளந்தலைமுறையினர் ஒருவரைக் கொண்டும் புதிய கோணங்களில் கம்பன் காவியம் பற்றிய சொற்பொழிவுகள் நிகழ்த்த பெற்று, அவை அச்சில் வர தொகுக்கப் பெற்று வருகின்றன.

  கம்பன் உள்ளிட்ட தொல்காப்பியர் முதல் கண்ணதாசன் வரையிலான இலக்கிய வளங்களை கற்க ஓர் ஆய்வு மேற்கோள் நூலகம் ஏற்படுத்தி, அவற்றைக் கற்பிக்கவும், ஆய்வு நிகழ்த்துவோருக்கான பணியிட வசதி செய்து, நெறிப்படுத்தி, செம்மொழித் தமிழ் ஆய்வுகளை ஊக்கப் படுத்தவும் முயற்சிகள் தொடங்கி நடை பெற்று வருகின்றன. 

  இம்முயற்சியின் ஒரு கூறாகத்தான் இப்போது இப்பன்னாட்டுக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப் பெற்றுள்ளது; தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை  இத்தகு கருத்தரங்கமும், இடையிட்ட ஆண்டில் இலக்கியப் பயிலரங்கமும் நடத்தப் பெறும்.     

ஆய்வுத் தலைப்புகள்


பகுப்பு 1: கம்பன்  -  நேற்று


  • கம்பனில் தமிழ்
  • கம்பனில் மொழியியல்
  • கம்பனில் இடம்பெறும்  உத்திகள்
  • கம்பனில் அக மரபுகள்
  • கம்பனில் புற மரபுகள்
  • கம்பனில் யாப்பு நலம்
  • கம்பனில் சிந்தும் சந்தநயம்
  • கம்பனில் கையாளப்பெறும் வண்ணங்கள் 
  • கம்பனில் சுட்டப்பெறும் சடங்குகள்/ சமூக நம்பிக்கைகள்
  • கம்பனில் காணலாகும் கவின் கலைகள்
  • கம்பனில் அறியலாகும் அறிவியல் அருமைகள்
  • கம்பனில் புலப்படும் வழிபாட்டு மரபுகள்
  • கம்பனில் பல்கிடும் பழமொழிகள்
  • கம்பனில் சித்திரிக்கப்பெறும் சிற்றிலக்கியக் கூறுகள்
  • கம்பனில் சொல்லாக்கங்கள்
  • கம்பனில் சங்க இலக்கியத் தாக்கங்கள்
  • கம்பனில் புலனாகும் போர்க்கலை
  • கம்பனில் வடிக்கப்பெறும் வாழ்வியல்
  • கம்பனில் பரிமளிக்கும் ஐந்திணை வளங்கள்
  • கம்பனில் துலங்கிடும் இயற்கை எழில்
  • கம்பனில் கதைக் கட்டுக்கோப்பு
  • கம்பனில் காலக் கோலங்கள்
  • கம்பனில் பரத்தையர் பான்மை
  • கம்பன் - எதாவதொரு சங்கப் புலவர் இடையே புலமை நய ஒப்பாய்வு
  • கம்பனுக்கு முன் புழங்கிய இராமாயணக் கதைக் கூறுகள்
  • கம்பன் கதைப்போக்கோடு இயையும் பிற காப்பியங்கள்
  • கம்பன் பாத்திரங்களோடு பாங்குறும் பிற காப்பியப் பாத்திரங்கள்
  • கம்பன் வைணவனா?
  • கம்பன் எனும் கதை சொல்லி


பகுப்பு 2: கம்பன்  -  இன்று



  • கம்பனில் இருபதாம் நூற்றாண்டு உரையாசிரியர்கள்  உயர்நலம்
  • கம்பனில் கரைந்த ‘ரசிகமணி’ டி.கே.சி
  • கம்பன் ‘அடிமை’ கம்பன் அடிப்பொடி சா. கணேசன்
  • கம்பன் ‘கலைநிலை’ கண்ட கவிராஜபண்டித ஜெகவீரபாண்டியனார்
  • கம்ப நோக்கில் மகான்அரவிந்தர்
  • கம்ப ‘சித்திர இராமாயண’ பி.ஸ்ரீ. ஆச்சாரியா
  • கம்பன் கால, காவிய ஆராய்ச்சி அறிஞர் எஸ். வையாபுரிப் பிள்ளை
  • சிறியன சிந்தியாத எஸ். ராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே.)
  • கம்பன் காவிய விளக்கு அ.சீனிவாசராகவன்
  • கம்ப மேடைக் கலை வித்தகர் வாரியாரும்- கீரனும்
  • கம்ப ‘கலாநிதி’ கி.வா.ஜகந்நாதன்
  • கம்பன் ஆங்கில ஒப்பாய்வு அறிஞர் வ.வே.சு.ஐயர்
  • கம்ப ‘அசோகவன’ ஆய்வறிஞர் ஆ.முத்துசிவன்
  • ‘கம்பன் கலை’ வித்தகர் அ.ச.ஞானசம்பந்தன்
  • கம்ப ‘மானிடன்’ ப.ஜீவானந்தம்
  • கம்பனை ஆங்கில ஆக்கம் செய்த எஸ்.மகராஜன்
  • கம்ப ‘ராமரத்னா’ மு மு இஸ்மாயீல்
  • கம்பன் ‘கவிக் கொண்டல்’ க.கு.கோதண்டராமன்
  • கம்ப ‘வாணர்’ அ.அருணகிரி
  • கம்பனின் தாக்கம்  -  தற்காலக் கவிதைகளில்
  • கம்பனின் தாக்கம்  -  தற்காலச் சிறுகதைகளில்
  • கம்பனின் தாக்கம்  -  தற்காலப் புதினங்களில்
  • கம்பனின் தாக்கம்  -  மேடைக் கலையில்
  • கம்பன் புகழ் பரப்பிய இருபதாம் நூற்றாண்டு இயக்கங்கள்
  • கம்பன் புகழ் பதிவுசெய் கம்பன் கழகங்களின் பணிகள், கடமைகள்
  • கம்பன் விழாக்கள் வளர்த்த தமிழ்
  • கம்பன் ‘மருட்பா’ பாடிய இயக்கங்கள் -   ஒரு மறு வாசிப்பு
  • கம்பன் குறித்த இன்றைய ஆய்வுகள்  -  ஒரு மீள் பார்வை
  • கம்பன்  -   தோயாத் துறையிலாத் தோன்றல்
  • கம்பன்  -   நாடக அணிக்கொரு நாதன்
  • கம்பன்  -   கற்பனைத் திறம்பல கவித்த கவியேறு
  • கம்பன்  -   விழுப்பொருள் விஞ்சிய விபுதன்
  • கம்பன்  -   கல்வியில் பெரிய கடல்
  • கம்பன்  -   ஒழுக்கம் பேணிய உத்தமப் புலவன்
  • கம்பன்  -   கருத்துப் புரட்சிக் கவிஞன்
  • கம்பன்  -   விதிவலி உணர்த்திய மதிவலன்
  • கம்பன்  -   சமரசம் காட்டலில் சமனிலி
  • கம்பன்  -   சமய நோக்கினில் சமரசன்
  • கம்பன்  -   பாத்திரம் சுவை செய் பாவலன்
  • கம்பன்  -   வள்ளுவ நெறி செல் வள்ளல்
  • கம்பன்  -   தமிழ்ப் பண்பாட்டின் தாய்
  • கம்பன்  -   விருத்தக் கவி வேந்தன்
  • கம்பன்  -   முத்தமிழ்த் துறை வித்தகன்


பகுப்பு 3:   கம்பன்  - நாளை



  • கம்பனிடம் கற்கத்தகு இலக்கியக் கூறுகள்
  • கம்பனிடம் கற்கத்தகு வாழ்க்கைப் பாடங்கள்
  • கம்பனிடம் கற்கத்தகு அரசியல் அறங்கள்
  • கம்பனிடம் கற்கத்தகு சமுதாய நெறிகள்
  • கம்பனில் இன்னும் நிகழ்த்தத்தகு ஆய்வுப் பணிகள்
  • கம்பன் கழகங்கள் எதிர்கொள்ள வேண்டிய பணிகள்
  • கம்பனைப் பரப்பப் பல்கலைக் கழகங்களின் பணிகள்
  • கம்பன் என்றொரு மானிடன்.......?
  • கம்பன் என்றொரு மேலாண்மைத் திறனாளன்
  • கம்பன் என்றொரு உலக நேயன்
  • கம்பன் என்றொரு சத்குரு
  • கம்பன் என்றொரு மெய்ஞ்ஞானி
  • கம்பன் என்றொரு இலக்கியச் சித்தர்
  • கம்பன் ஒரு காவியம்
  • கம்பன் பேசும் பெண்ணியம்

நெறிமுறைகள்


  • பல்கலைக்கழகம், கல்லூரி, நிறுவனம் சார்ந்த பேராசிரியர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரையுடன், கல்லூரி / நிறுவன முழு முகவரி , தொலைபேசி எண் / அஞ்சல் குறியீட்டு எண் விவரங்களை இணைத்தே அனுப்பி உதவிடுக.
  • மேற்குறித்த கல்வி நிறுவனம் எதனையும் சாராத தமிழ் ஆர்வலர்களும் / இலக்கியச் சுவைஞர்களும், கம்பநேயர்களும் உள்ளூர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் ஒருவரின் அல்லது, கம்பன் கழகத் தலைவரின் / செயலாளரின் முத்திரையுடன் கூடிய பரிந்துரையோடு கட்டுரைகளை அனுப்பலாம்; கட்டுரைகள் அனுப்பாத இலக்கியச் சுவைஞர்கள் தம்மை ஒரு சுவைஞராக அதற்குரிய  கட்டணம் செலுத்தி, பதிவு செய்து இருநாட்களும் பங்கேற்று மகிழலாம்; இன்தமிழ்ச் சுவை பருகி ஏற்றமிகு தமிழ் வளர்த்த பெருமை பெறலாம்.
  • ஆய்வுக் கட்டுரைகள் முற்றிலும் பேராளார்களின் சொந்தப் படைப்பாகவே இருத்தல் வேண்டும். கண்டிப்பாக பிறர் படைப்புக்களைத் தழுவியதாகவோ, கையாடியதாகவோ இருத்தல் கூடாது.கூறப் பெறும் ஆய்வுக் கருத்துக்கள் /முடிவுகளுக்கு கட்டுரையாளரே பொறுப்பாவார்.
  • ஆய்வு மானாக்கர்கள் தம் நெறியாளர் பரிந்துரையும் பதிவுப் படிவமும் இல்லாத ஆய்வுக் கட்டுரைகள் ஏற்கப் பெறா.
  • ஆய்வுக் கட்டுரைகள் ஏ4 தாளில் இருவரி இடைவெளியுடன், 750 முதல் 800 சொற்கள் அளவினதாய்,  பாமினி எழுத்துருவில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் , கணினி வழி ஒளியச்சு செய்து, மின்னஞ்சல் வழி / குறுவட்டு வடிவில் அனுப்ப வேண்டும். முடிந்த அளவு பிறமொழிக் கலப்பற்றதாய் இருத்தல் வேண்டும்.கையெழுத்துப் படிகள் கண்டிப்பாய் ஏற்கப் பெறா.
  • ஆய்வுக் கட்டுரைகள் மதிப்பிடு வல்லுனர் / அறிஞர் குழுவின்  ஏற்பினைப் பெற்று, கம்பன் தமிழ் ஆய்வுக் கோவையாக நூல் வடிவில் மிஷிஙிழி எண்ணுடன் அச்சிடப் பெற்று கருத்தரங்கில் பேராளர் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரதி வழங்கப்பெறும். இரண்டொரு அதிகப்பிரதி வேண்டுவோர் முன் கூட்டியே பதிவு செய்து கொண்டு அதற்குரிய தொகையினைச் செலுத்தின் அவ்வண்ணம் பெறலாம்.
  • தேர்ந்தெடுக்கப் பெற்ற கட்டுரைகளில் அத்தகு வல்லுனர் /அறிஞர் குழுவின் சிறப்புப் பரிந்துரை/ முத்திரை பெறும் பத்துக் கட்டுரையாளர்க்குச் சிறப்புப் பரிசுகள் கருத்தரங்கில் வழங்கப் பெற்று கௌரவிக்கப் பெறுவர்.
  • கருத்தரங்கிற்கு நேரில் வரும் பேராளர்க்கு மட்டுமே இவ்வாய்வுக் கோவைப் பிரதியும், பிற வெளியீடுகளும், இன்னபிற பயன்தரு பொருட்களும் வழங்கப் பெறும்.
  • பேராளர்க்கு இருநாட்களும் உணவும், பொதுத் தங்குமிட படுக்கை வசதியும் கொடுக்கப் பெறும். தனிஅறை/ பகிர்அறை வசதி வேண்டுவோர், முன்கூட்டியே தெரிவித்து அதற்குரிய கட்டணம் செலுத்தின் அவ்வசதி செய்து தரப் பெறும்.அதேபோல் முன்னே, பின்னே கூடின நாள் தங்க விரும்புவோரும் முன் கூட்டியே தெரிவித்து, உரிய கட்டணம் செலுத்தின் வசதி செய்து தரப் பெறும்.
  •  பேராளர்கள், அஞ்சல் குறியீட்டு எண்ணுடனான தம் முழு முகவரி, கை பேசி எண், மின்னஞ்சல் இருப்பின் அம்முகவரி, ஆகியனவற்றைத் தெரிவிக்க வேண்டுகிறோம். கருத்தரங்கு குறித்த அழைப்பு, அவசரச் செய்திகள், குறுஞ்செய்திகளாக கைபேசி / மின்னஞ்சல் வழியாக  மட்டுமே அனுப்பப் பெறும்.
  • மேற்கோள் பாடல்களின் எண்ணையும், அடிகளையும் / பிற துணை நின்ற நூல்களின் விவர, பக்க  அடிக்குறிப்புகளையும்  அவசியம் ஆங்காங்கே குறிப்பிட வேண்டும்; அவ்வாறு செய்யப் பெறாத பாடல்கள் / பகுதிகள் முழுவதுமாக நீக்கப் பெறும்.
  • தேர்ந்தெடுக்கப் பெறாத கட்டுரைப் பிரதிகள் எக்காரணங் கொண்டும் திருப்பி அனுப்பெறா. தேர்ந்தெடுக்கப் பெறாக் கட்டுரைகளுக்குரிய பேராளர் கட்டண வரைவோலைகள் 31.01.2013க்குள்  உரியவர்க்குத் திருப்பி அனுப்பப் பெறும்.

பேராளர் கட்டண விவரம்


பேராளர் கட்டண விவரம்

உள்நாட்டுப் பேராசிரியர் (பேராளர்)

ரூ.500/-

ஆய்வு மாணாக்கர் ( Students registered for M.Phil / Ph.D programmes) (பேராளர்)

ரூ 350/-

சுவைஞர் (கட்டுரை அனுப்புவோரும் / அனுப்பாதோரும்)

ரூ.250/-

வெளிநாட்டுப் பேராளர்

அமெரிக்க$ 50/-

சுவைஞர்

அமெரிக்க $ 25/-



இக்கட்டணங்கள் காரைக்குடியில் மாற்றத் தக்க (Crossed Bank Demand Draft) குறுக்குக் கோடிட்ட வங்கி வரைவோலையாக “KAMBAN TAMIL RESEARCH CENTRE” என்ற பெயருக்கு Registered Post / Speed Post / Courier Mail மூலமாக அனுப்பி உதவிட வேண்டுகிறோம்.

பதிவுப் படிவமும், ஆய்வுக் கட்டுரையும், கட்டணமும் 15-12-2012க்குள் காரைக்குடி அலுவலகத்திற்கு வந்தடைய வேண்டும்.